Monday, August 29, 2011

சம்பளம் தரும் பொதுமக்களைப் பற்றி அரசு கவலைப்படுமா?


அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றி புறக்கணிக்கப்படுகின்றன என்பதற்கு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் நேரிட்ட விபத்தும், அந்தச் சம்பவத்தில் மூச்சுத் திணறல் காரணமாக மூன்று உள்நோயாளிகள் இறந்ததுமே சான்றுகள்.

இது விபத்து என்றும், இத்தகைய சம்பவங்கள் எந்தவொரு கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும்கூட நிகழும், நிகழ்ந்தும் இருக்கின்றன என்று அரசுத் தரப்பிலோ அல்லது அரசு மருத்துவமனை ஊழியர்கள் அமைப்போ கூறலாம்.

அந்த வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத் தோன்றினாலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள எல்லா மருத்துவமனைகளிலும் இத்தகைய விபத்துகள் வெவ்வேறு விதங்களில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதும், இதற்கு அடிப்படைக் காரணம் மருத்துவமனைகள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதுதான் என்கிற உண்மையை அவர்கள் ஒருநாளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

மாநிலத் தலைநகரில், குறிப்பாக ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அடிக்கடி வந்துபோகும் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனைகளிலேயே இத்தகைய பராமரிப்புக் குறைபாடு இருக்கிறது என்றால், மாவட்ட அளவிலான மருத்துவமனைகள் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.

காமராஜ் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றும்கூட நின்றுகொண்டிருக்கையில், அண்மையில் கட்டப்பட்ட கட்டடங்கள் விரிசல் விட்டும், கதிரொளித் தடுப்புப்பலகைகள் உடைந்தும், கழிவறைக் குழாய்கள் இடம்பிறழ்ந்தும் கிடக்கின்ற அவலத்தைக் கண்கூடாகக் காண முடியும்.


புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தில் விரிசல் என்றால் அது குறித்து, புகார் தெரிவிக்கவும், குறிப்பிட்ட கட்டட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமை மருத்துவர் கடிதம் எழுத முடியும். ஆனால், அவர்கள் அதைச் செய்ய விரும்புவதில்லை. நல்லது செய்யப்போய், பெரிய இடத்துக்கு விரோதமாகி எங்கேயாவது இடமாற்றம் செய்துவிட்டால் என்ன செய்வது என்ற சுயநலக் கவலையில் மெத்தனமாக இருப்பதுதான் இத்தகைய பராமரிப்புப் குறைபாட்டுக்கும், மரணங்களுக்கும் அடிப்படைக் காரணம்.

மருத்துவத் துறைக்கு அரசு பெரும் நிதியை ஒதுக்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.15,592 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 2011-12-ம் ஆண்டுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்கள். அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், இவை யாவும் விழலுக்கு இறைத்த நீராகத்தான் இருக்கிறது. அரசுக் கட்டடம் என்றாலே ஒரு பங்கு மணல் கூடுகிறது. வெறும் ஏ.சி. கருவிகள் மட்டுமல்ல, அரசு மருத்துவமனையின் மருத்துவப் பரிசோதனைக் கருவிகளும் அடிக்கடி (சில இடங்களில் எப்போதும்) பழுதாகிக் கிடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் சம்பந்தப்பட்ட ஊழியர்தான் என்று சொன்னால் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்குக் கோபம் வருகிறது.

தமிழ்நாட்டின் எந்த ஓர் அரசு மருத்துவமனையிலும் உள்ள சாக்கடைகள், கழிவறைகள் போல நோய்பரப்பும் இடம் வேறு எதுவுமே இருக்க முடியாது. கேட்டால், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழைகள் இவற்றை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்ன செய்வது? என்று சொல்வார்கள்.

இதே ஏழைகளைத்தான் அரவிந்த் கண் மருத்துவமனை, சங்கர நேத்ராலயா போன்ற மருத்துவமனைகள் கிராமத்துக்கே போய் அழைத்து வருகிறார்கள். அவர்களும் எந்தக் கழிப்பறையையும் முறையாகப் பயன்படுத்தத் தெரியாதவர்கள்தான். மாற்றுஉடை இல்லாதவர்கள்தான். ஆனாலும் அந்தப் பொதுக் கழிப்பறைகள் சுத்தமாக இருக்கின்றன. எச்சில் துப்பக் கூச்சமும், அசிங்கம் செய்ய அச்சமும் தருகிற தூய்மை அங்கே இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் பராமரிப்புத்தான். அங்கேயும் ஏ.சி. கருவிகள் வழக்கமாகப் பழுதுபார்க்கப்படுகின்றன. ஆனால், அந்த ஏ.சி. கருவிகள் 40 விழுக்காடு கமிஷன் தனியாக வாங்கிக் கொண்டு வாங்கப்பட்டவை அல்ல.

தனியார் மருத்துவமனைகளிலும் பராமரிப்புக் குறைபாடுகளால் ஏதோ ஒரு நேரத்தில் விபத்து நேரிடலாம். அப்படி நேர்ந்தால், அந்த விபத்துக்குக் காரணமானவர்கள் அடுத்தநாள் அங்கே வேலையில் இருக்க மாட்டார்கள், இருக்க முடியாது. ஆனால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று பேர் சாவுக்குக் காரணமான பராமரிப்புக் குளறுபடிக்கு எந்த ஊழியரை அல்லது மருத்துவரைப் பொறுப்பாக்கினாலும், அவருக்கு ஆதரவாகப் போராட்டம் நடக்கும். இந்த விபத்துக்குக் காரணம் அரசு ஊழியர் அல்ல, அரசுதான் என்பார்கள்.

அரசு ஊழியர் யாராவது தவறு செய்தால், "ஏதோ தவறு நடந்துவிட்டது. இதற்காகத் தவறு செய்தவரின் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது. பாவம் பிழைத்துப் போகட்டும்' என்று மேலதிகாரிகள் நினைக்கிறார்களே தவிர, தங்களுக்குச் சம்பளம் தரும் பொதுமக்களைப் பற்றியோ, அவர்களுக்குத் துரோகம் இழைக்கப்படுகிறது என்பது பற்றியோ யாரும் கவலைப்படுவதாக இல்லை.

தலைமையின் அடிப்படைத் தகுதியே 'தவறைத் தட்டிக்கேட்கவும், தண்டிக்கவும் தயங்காத நேர்மையும், நிர்வாகத் திறமையுடையாவராகவும் இருப்பதுதான்'.

இந்தியாவின் எந்தவொரு அரசியல்வாதியிடமும் இல்லாதயோன்றை, அரசு மருத்துவமனைகளில் தேடினால் மட்டும் கிடைக்குமா என்ன?



.....................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................

Friday, August 12, 2011

கறுப்புப் பணம் வெள்ளையாக மாற உதவும் மக்களுக்கான அரசு?



புலி வருது புலி' கதையாக, கடைசியில் உண்மையாகவே புலி வந்துவிட்டது. ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் 2.5 பில்லியன் டாலர் என்று அறிவித்துள்ளது ஸ்விஸ் நேஷனல் பாங்க்.  இதுவெறும் அறிவிப்பு மட்டுமே. 

இந்தப் பணம் யார் யாருக்குச் சொந்தம் என்கிற பட்டியல் எல்லாம் வெளியிடப்படவில்லை. அது வெளியிடப்படுமா என்பதும் தெரியவில்லை.  குறிப்பிட்ட சில பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, "கறுப்புப் பணம் இருப்பது உண்மைதான். ஆனால், இந்தப் பிரச்னை ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கிறது. இந்தியக் கறுப்புப் பணம் குறித்து ஆளாளுக்கு ஒரு தொகை சொல்கிறார்கள், எப்படி இவர்கள் இந்தத் தொகையைக் கணிக்கிறார்கள் என்று தெரியவில்லை' என்று கூறியிருந்தார்.  

இப்போது ஸ்விஸ் நேஷனல் வங்கியே இந்தியர்கள் தங்கள் நாட்டில் சேமித்து வைத்துள்ள பணம் 2.5 பில்லியன் டாலர்கள் என்று கூறிவிட்டிருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 11,250 கோடி!  இந்தத் தொகை 2010-ம் ஆண்டின் இறுதி வரையிலான புள்ளிவிவரம் என்கிறது ஸ்விஸ் நேஷனல் பாங்க். ஆனால் இந்தத் தொகை குறைவு என்று கூறுகிறார் ஸ்விஸ்ட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மற்றொரு வங்கியின் உயர் அதிகாரி. 

குறைந்தபட்சம் 15 முதல் 20 பில்லியன் டாலர்கள் இருக்கும் என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.  இந்த வங்கி அதிகாரி சொல்லும் கணக்கைக்கூட நாம் அதிகம் என்று நினைத்து இதில் சராசரியாக 10 பில்லியன் டாலர் என்று வைத்துக்கொண்டாலும், சுமார் 45,000 கோடி ரூபாய் ஸ்விஸ் வங்கிகளில் புழங்குகிறது என்று கருத இடமிருக்கிறது. இப்போதுதான் நமது அரசியல்வாதிகளின் துணையோடு இந்திய அரசு எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டிருக்கிறது என்பது புரிகிறது.  

ஸ்விஸ் வங்கி தெரிவிக்கும் இன்னொரு தகவல் நம் அரசியல்வாதிகள் எவ்வளவு தந்திரமாகச் செயல்படுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 500 மில்லியன் (ரூ. 2,250 கோடி) இந்தியர்களின் (கறுப்புப்) பணம் சேமிப்பிலிருந்து குறைந்துள்ளது என்று ஸ்விஸ் நேஷனல் பாங்க் தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் திடுதிடுப்பென வங்கியில் சேமித்து வைத்திருந்த பணம் குறைவானேன்? கறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதுதான் இதற்குக் காரணம் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்.  

கார்ப்பரேட் நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சிலர்தான் இப்படி ஸ்விஸ் வங்கிகளில் பணத்தைப் போட்டு வைத்திருப்பவர்கள். இவர்கள் அனைவரும் தங்கள் பெயர், பட்டியலில் வந்துவிடக்கூடாது என்பதற்காக பல வழிகளிலும் பணத்தை வேறு நாடுகளுக்குக்கொண்டு செல்லத் தொடங்கிவிட்டனர் என்பதுதான் இதன் பொருள்.  இருமுறை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் அமலில் உள்ள நாடுகளான சிங்கப்பூர், மொரிஷியஸ் ஆகியவற்றின் மூலமாக ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருந்த கறுப்புப்பணம்  இந்தியாவுக்கு முதலீடுகளாகக் கொண்டுவரப்படுகின்றன. 

அன்னிய நேரடி முதலீடு, இந்திய நிறுவனப் பங்குகளில் அன்னிய முதலீடு என பல வழிகளிலும் இந்தக் கறுப்புப் பணம் இந்தியாவுக்குள் ஏற்கெனவே வந்துவிட்டது.  இப்போது 2011-ம் ஆண்டின் அரையாண்டு முடிவுற்ற நிலையில், மேலதிகமான பணம் இந்த நாடுகள் வழியாக இந்தியாவுக்குள், வெள்ளைப் பணமாக மாறி வந்திருக்கவும்கூடும்.  இந்தியாவில் பங்கு வர்த்தகத்தைக் கண்காணிக்கும் செபி அமைப்பு மற்றும் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா ஆகியன இத்தகைய முறைகேடுகளை மிகவும் நுட்பமாகப் பார்ப்பதாகச் சொல்லப்பட்டாலும் மத்திய அரசு, பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்கிற நிலைப்பாட்டில் செயல்படும்போது அவர்களால் இந்த அமைப்புகளை என்னதான் செய்துவிட முடியும்?  இவ்வாறு முறைகேடாக அன்னிய நேரடி முதலீடு வருகிறது என்று தெரிந்தவுடன் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்? இதற்கான வழிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். 

சட்டத்தின் ஓட்டைகளை அடைக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு வேகமாக ஓட்டையைப் பெரிதாக்குகிறது. வழிகளை அகலமாக்கி, வெளியேபோன பணம் சீக்கிரம் வந்து சேர்ந்தவுடன் அடைக்கலாம் என்று சிந்திக்கிறது.  இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு உள்ள அளவை, கடந்த இரு ஆண்டுகளில் பல மடங்கு உயர்த்தி, அனுமதித்தது நிதியமைச்சகம். கடந்த பட்ஜெட்டில்கூட நிறுவனப் பங்குகளில் அன்னிய முதலீடு 45,000 கோடி ரூபாய் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. அன்னிய நேரடி முதலீட்டின் அளவையும்கூட, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

 மொரிஷியஸ் நாட்டுடன் நிலவும் இப்போதைய இருமுறை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைத்து, புதிய ஒப்பந்தம்போட வேண்டும் என்று மத்திய அரசு பேசிக்கொண்டே இருக்கிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.  கடந்த நான்கு ஆண்டுகளில், அன்னிய நேரடி முதலீடாகவும் இந்திய நிறுவனப் பங்குகளில் அன்னிய முதலீடாகவும் வந்த பணம் எவ்வளவு, அப்படி முதலீடு செய்த நிறுவனங்கள் எவையெவை, இவை உண்மையாகவே பலகாலமாக சிங்கப்பூர், மொரிஷியஸ், துபாய் நாடுகளில் இருந்துவரும் அமைப்பா அல்லது திடீரென முளைத்த அமைப்பா என்பதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. 

அப்படியெல்லாம் நமது அரசு கவலைப்பட்டுக் கொள்வதாகவே இல்லை.  வெளிநாட்டிலிருந்து யார் வேண்டுமானாலும், நேற்று முளைத்த காளான் நிறுவனங்கள்கூட முதலீடு செய்யலாம் என்று அரசு அனுமதிப்பதும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கறுப்புப்பணத்தை நீங்கள் சட்டப்பூர்வ முதலீடாக இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள் என்பதும் ஒன்றுதான்.  

அன்னிய முதலீட்டுக்கு எல்லாக் கதவுகளையும் திறந்துவைத்து கேள்விமுறை இல்லாமல் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளுங்கள் என்று அனுமதித்து விட்டால் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் போட்டு வைத்திருப்பதாகச் சொல்லப்படும் 2.5 பில்லியன் டாலர்களும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும். 

ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று யார் சொன்னது?

 
.....................................................................

மக்கள் நலம் விரும்பும் 
         BKPK.

....................................................................

( நன்றி:தினமணி)